நாமக்கல்: தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:




நாடும் நன்றாக இருக்க வேண்டும் :


தலைவர் கருணாநிதி, நல்ல உடல்நலத்துடன் உள்ளார். தொண்டர்கள் பயப்பட தேவையில்லை. அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இளைஞரணி அறக்கட்டளை சார்பில், இதுவரை, 17 ஆயிரத்து, 961 மாணவர்களுக்கு, 6.70 கோடி ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், 'கனவு காணுங்கள்; வெற்றிபெறுவீர்கள்' என, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கூறியுள்ளார். அதனால், மாணவர்கள் லட்சியத்துடன் வாழ வேண்டும். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாடும் நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான், நமக்கு பின் வரக்கூடிய சந்ததியினர் நலமுடன் வாழமுடியும். மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
நாட்டில், பல கட்சிகள், பல தலைவர்கள் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவே, உங்களை போன்ற மாணவர்களை நம்பி தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.